இந்திய முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில், அவர் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.
குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எறிந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மரபணு பரிசோதனை மூலம் உயிரிழந்தவர்களின் விவரங்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரி இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விமானத்தில் பயணித்தவர்கள் விபரம்
- முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்
- மதுலிகா ராவத் (பிபின் ராவத் மனைவி)
- பிரிகேடியர் லிடர்
- லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
- குர்சேவர் சிங்
- ஜிஜேந்தர் குமார்
- விவேக் குமார்
- சார் தேஜா
- கவில்தார் சத்பால்
மீட்கும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. சம்பவ இடத்தில் நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி.,ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியினை விரைவுப்படுத்தி வருகின்றனர்